Skip to main content

மீட்பை நோக்கி - பயண அனுபவம்

எல்லோர் வாழ்விலும் மறக்க விரும்பா நாள் ஒன்று இருக்கும், என் வாழ்வில் அப்படியான ஒரு நாள் தான் அது. அது ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியத்துக்கு மேலாகவே அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை. காரணம் இல்லாத அதீத மன அழுத்தம், எதையாவது உடைக்க வேண்டும் போன்ற மனவோட்டம் இரண்டும் உருவாகியிருந்தது. நேரம் செல்ல செல்ல அந்த அழுத்தம் கூடிக்கொண்டே போனது. எதற்கும் அந்த அழுத்தம் கட்டுப்படவே இல்லை புத்தகம், நண்பர்கள் எதற்கும். மெல்ல அந்த அழுத்தம் தற்கொலை எண்ணமாக மாறுவதை உணரவே மனதில் பயம் வர ஆரம்பித்தது. திடீரென தனியாக எங்காவது பயணம் செல்வோம் அது உதவும் என தோன்றியது. நீண்ட நாள் ஆசையான தஞ்சாவூர் போகலாம் என முடிவு செய்து கிளம்பினேன். 

இப்பயணத்தில் கைபேசி இல்லாமல் மனிதர்கள் உதவி கொண்டே எல்லா விஷயத்தையும் செய்யணும்னு முடிவு பண்ணிக்கிட்டேன். முன்பதிவுகள் புகைப்படம் கூடாதெனவும் முடிவு. 

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு விரைவு பேருந்தில் ஏறிக்கொண்டேன். பின் பகுதியில் தான் இடம் இருந்தது மெல்ல உள்ளே சென்றேன் ஜன்னல் ஒர இருக்கையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். அவனது வசீகரிக்கிற, சுறுசுறுப்பான முகம் மனதுக்கு இதமாக இருக்கவும் அவன் அருகில் அமர்ந்துவிட்டேன். அழகான சிரிப்போடு என் வரவை வரவேற்றான். அவனோடு பேச ஆரம்பித்தேன். அவனது மென்மையான, ஆர்வமான பேச்சு அழுத்தத்தை குணமாக்க ஆரம்பித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 

சொற்ப சம்பளத்தில் டிப்ளமோ படித்த சின்ன பையன் ரொம்ப மகிழ்ச்சியாக, ஆரவாரத்தோட வாழ்வை வாழும் விதம் ரொம்பவே பிடித்திருந்தது. மேலும் மனதை பழைய நிலைக்கு கொண்டுவந்தது. 

டிக்கெட் எடுக்கும் போது, டீ குடிக்கும் போது என்னிடம் சில்லறை இல்லையென நூறு ரூபாய் வரை அவன் எனக்கு செலவளித்திருந்தான். யாரென்றே தெரியாத ஒருவனுக்கு மகிழ்ச்சியாக தன்னிடம் இருப்பதை பகிர்ந்தளிக்கும் விசாலமான மனசு எளிய மக்களிடம் மட்டுமே மிச்சம் இருக்கிறது என்பதை உணர முடிந்தது. 

அதிகாலை ஐந்து மணி வாக்கில் தஞ்சாவூரில் இறங்கிறேன். ஒரு சில ஊர்கள் நம் மனதிற்கு சட்டென நெருக்கமாகி விடும். அப்படித்தான் என் கனவு நிலமான தஞ்சையும் உடனே நெருங்கி விட்டது. பெரிய கோவிலை பார்க்க வேண்டும் என்ற ஆசையை நீண்ட நாட்கள் மனசில் உருப்போட்டு வச்சிருந்ததால் அதன் மீது ஒரு  காதல் உருவாகி இருந்தது. பெரிய கோவிலை பார்க்க போறோம்கிற பரவசம் மனசு பூரா நெறஞ்சு கிடந்தது.மாலையில் கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கோவிலை நெருங்க நெருங்க மனம் துள்ளாட்டம் போட்டது. 

கோவிலுக்கு எதிர்புறத்தில் ஓர் உணவகத்தில் கோவிலை ரசித்து கொண்டே சாப்பிட இடம் அமைச்சு வச்சுருந்தாங்க. எனக்கு அப்போ தன் காதலியை தூரத்தில் இருந்து அவள் அறியாமல் ரசிப்பதின் சுகந்தம் நியாபகம் வரவும் அந்த உணவகத்தில் அமர்ந்து காபி அருந்திகொண்டே கோவிலை கொஞ்ச நேரம் ரசித்து கொண்டிருந்தேன். அந்த ரசனையை கலைக்க மனம் இடம் கொடுக்கவே இல்லை, முடிந்த வரைக்கும் கோவிலை பார்த்து முடித்து விட்டோம் என்கிற நிலையை தள்ளிப்போடவே மனம் விரும்பியது. 

ஆயினும் உள்ளே சென்று ரொம்ப நிதானமாக பாகம் பாகமாக பெரிய கோவிலை ரசித்து மனதில் நிரப்பிக்கொண்டேன். ஒவ்வொரு கோணத்திலும் கோவிலை மனதில் படமாக்கிக்கொண்டேன். 

அந்தி வர வர கோவிலின் அழகும் மெருகும் கூடிக் கொண்டே இருந்தது. உண்மையில் மாலை மங்குற போதும், இரவிலும் தான் கோவிலுக்கு கொள்ளை கொள்கிற அழகு வந்து சேர்கிறது. நான் இதை திட்டமிட்டே என் முதல் சந்திப்பை மாலையில் அமைத்துக்கொண்டேன். முதல் முறை என்கிற அனுபவம் வாழ்வில் ஒரு முறை தான் வருகிறது என்பது ரொம்பவே வருத்தமாக இருந்தது. கோவிலில் இருந்து கடைசி ஆளாக மனமின்றி வெளியேறினேன். 

தஞ்சையின் வீதி முழுக்க ஆசை தீர நடந்து திரிஞ்சேன். மறு நாள் காலையில் அடுத்த காதலியான கங்கைகொண்ட சோழபுரம் போறதாக திட்டம். 

தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் போற வழி காவேரி மற்றும் கொள்ளிடம் எனும் இரு பெரும் நதிகளின் பயண பாதை. ஆகவே அவற்றின் பேரழகை காண்பதற்காக பேருந்தின் முதல் இருக்கைல அமர்ந்துவிட்டேன்.  அதுவும் காலை நேர பயணம் ஆனதால் மனசு ரொம்ப ஆரவாரம இருந்துச்சு. 
வழியில் திருவையாறு போன்ற ஊர்களை கடக்கும் போது இந்த நிலத்தின் பண்பாட்டு தொன்மையை, பெருமையை உணர முடிந்தது.
இரு நதிகளும் தன் அகண்ட பரப்பு முழுக்க பொங்கி பெருகி ஓடுறத பார்ப்பது உண்மையில் வாழ்விலே ஒரு பேரனுபவம் தான்.  இத பாக்க நான் பாக்கியம் பெற்றதா தான் எனக்கு தோணுச்சு. 

இரண்டு நதியோட பிரமாண்டத்தையும் முடிந்த வரைக்கும் கண்களுக்குள் நிரப்பிக் கொன்டேன். அப்போது தான் இயற்கையோட பேராற்றலுக்கு முன்னாடி மனித சக்தியோட சிறுமையை உணர்ந்து கொண்டேன். 

சாலைக்கு இரு புறமும் பச்சை நிற வானம் மாதிரி செழித்த வயல் வெளிகள் பரவி கிடந்தது. அந்த இரண்டு நதிகளின் பயனால் செழித்திருந்தது பூமி. தஞ்சை ஏன் நெற்க்களஞ்சியம் என்று அழைக்கப்படுவதின் காரணத்தை உணர முடிந்தது.  உண்மையில் நாம் விவசாயத்தையும், ஆறுகள் போன்ற இயற்கை வளங்களையும் அழித்து உருவாக்கும் வளர்ச்சியும் வசதியும் பேராபத்தானது மற்றும் அடிமுட்டாள்தனமானது. இதை நாம் அவசியம் உணர்ந்து நம் தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டிய கட்டாயமான கால கட்டத்தில் இப்போது நாம் இருக்கிறோம். 

ஒரு சிறிய கிராமத்து பேருந்து பயணத்திற்கு பின் கங்ககை கொண்டசோழ புரத்தை வந்தடைந்தேன். பெரிய கோவிலை போன்றே இக்கோவிலை ரசித்து விழுங்கி விட்டேன். என் பயணம் ஒரு பூரணத்தை அடைந்ததாக உணர முடிந்தது என்னால். 

பெரிய கோவிலை விட அளவில் சிறியதாக இருந்தாலும் சிற்ப வேலைப்பாடுகளின் கற்பனையும், நுட்பமும் இக்கோவிலில் உச்சம் பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ராசேந்திர சோழனுக்கு சிவன் பட்டம் கட்டி விடுவது போன்ற சிற்பம் மிக மிக அற்புதமானது மற்றும் சிற்பிகளின் திறமைக்கும் கலையின் தரத்திற்கும் ஓர் உதாரணம். இச்சிலையில் ஆபரணங்கள் மற்றும்  பூமாலை போன்றவற்றை  நேர்த்தியாக செதுக்கிய விதம் என்னை மெய் மறக்க வைத்தது. அச்சிலையின் முன் அமர்ந்து நெடு நேரம் ரசித்துக்கொண்டிருந்தேன். நிச்சயமாக புடைப்பு சிற்பங்களின் கலைக்கூடம் என்றே இக்கோவிலை சொல்லலாம் என தோன்றியது எனக்கு.

கங்கைகொண்ட சோழபுரத்தோடு என பயணத்தை நிறைவு செய்து விட்டு ஜன்னல் ஒர இருக்கையில் அமர்ந்து பயண நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே சென்னை திரும்பினேன்.  

கங்கைகொண்ட சோழபுரத்தில் தான் சிற்பங்களை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை நான் கண்டு கொண்டேன். இப்பயணத்தின் வழியாக நான் கண்டடைந்த மிக முக்கிய மீட்பாக இதை கருதுகிறேன். 

என்னளவில் சுய உணர்தலுக்கும், வாழ்வின் மீதான பிடிப்பை அதிகரிக்கவும், வாழ்வை மேலும் சுவாரசியமாக்கவும் ஆதர்சமான வழி பயணங்களே என தோன்றியது.  அதோடு ஓர் நிலத்தின் மனிதர்கள், கலாச்சாரம், பண்பாடு, உணவு, இயற்கை எழில் ஆகியவற்றை பேராசையோடு அனுபவிக்க, உணர்ந்து கொள்ள பயணங்கள் ஒன்றே வழி என்பதையும் அறிந்து கொண்டேன். 

முக்கியமாக இப்பயணத்தில் கைபேசி உபயோகிக்காததால் புகைப்படம் ஏதும் எடுக்கவில்லை. அது உண்மையில் என் நினைவின் ஆழத்தை அதிகரித்தது. புகைப்படங்கள் நம் நினைவுகளை அழித்து விடுவதை அனுபவித்து தெரிந்து கொண்டேன். அவசியம் அடுத்த பயணத்தில் புகைப்படம் எடுக்காமல் இருந்து பாருங்கள். கொஞ்ச நாள் கழித்து அப்பயணத்தை நினைத்து பார்க்கையில் நான் கூறியதை உங்களால் நிச்சயம்  உணர முடியும். மேலும் சின்ன சின்ன தகவல்களுக்காக கூட உள்ளூர்  மனிதர்களிடம் நடத்திய உரையாடல்கள்  அனைத்தும் அவ்வளவு இனிமையாகவும், கனிவாகவும் இருந்தது. இது அந்த நிலத்தின் மனிதர்களை அறிந்து கொள்ள எனக்கு உதவியது. 

இப்பயணம் நான் வாழ்வில் செய்த முதல் தனிமை பயணம். மேலும் இது பல வழிகளில் என் வாழ்வுக்கான மீட்புக்களை கண்டடையவும்  உதவியது. ஆகவே இது என் மனதுக்கு நெருக்கமான பயணமாக தானாகவே மாறியிருந்தது.




Comments

Post a Comment

Popular posts from this blog

என் தாய் மரணிக்கின்றாள்

ஆம் என் தாய் மரணிக்கின்றாள்... தாமிரபரணித்தாய் மரணிக்கின்றாள்... அது ஒரு மங்கிய மாலைப்பொழுது அன்னையே நான் உன் மடியில் அமர்ந்திருந்தேன்... தென்றல் தீண்டையில் உன் தேகம் சிலிர்த்ததை நான் மட்டுமே கண்டேன்... பறவைகள் உனை பருகிய வேளையில் நானும் உனை பருகி பரவசம் அடைந்தேன்... உன் உள்ளக்களிப்பை நான் உணர்ந்திருந்தேன்... மார்முட்டும் பிள்ளையின் அன்னையாய் நீ பூரித்திருந்தாய்... அந்த சலனமற்ற பயணத்தில் உன் மெல்லிய குரல் என்னை கரையச் செய்தது... கதிரவனின் செந்நிறக் கிரணங்களில் உன் மேனி பொலிவுற்றிருந்தது... பொதிகையில் பிறந்தவளே என் அன்னையே... உன் பாதம் பட்ட இடமெல்லாம் பசுமை பரப்பினவளே ... உழவுக்கு உயிரளித்து எங்களுக்கு அன்னமிட்டவளே... வானம் வஞ்சித்த போதிலும் எங்களுக்கு வாழ்வளித்தவளே... இன்று நீ மரணித்துக்கொண்டிருக்கிறாய்... அநேக அன்னைகளாய் உன் மக்களே உனக்கு மரணம் தந்துவிட்டனர்... பேராசை பித்து பிடித்த கயவர்கள் உன் மேனியைச் சுரண்டி மாளிகை கட்டிக்கொண்டார்கள்.... தாயை கொன்று தன்னை வளர்த்துக்கொண்டார்கள்... மார்பில் துளையிட்டு உனை உறிஞ்சிவிட்டார்கள் பன்னாட்டு பணவெறியர்கள்... உன் பாதையெங்...

குமாயுன் புலிகள் - வாசிப்பு அனுபவம்

குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ.ர. ஜிம் கார்பெட் ஓர் ஆங்கிலேய வேட்டைக்காரர் மற்றும் வன உயிர் ஆர்வலர். கம்பெனி ஆட்சிக் காலத்தில் இன்றைய உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாயுன் பிரதேசத்தில் தங்கி அங்குள்ள ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடியவர். இவ்வாறான வேட்டை அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். கிண்டிலில் தினமும் கிடைக்கும் இலவச புத்தகங்களில் ஒன்றாய் இது எனக்கு கிடைத்தது. ஆசிரியர் உரையின் வழியே வேங்கைகள் ஆட்கொல்லிகளாக மாறுவதன் காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார் ஜிம். மேலும் வேங்கைகள் மீதான மோசமான பொது கருத்துக் களை உடைக்கவும் செய்துள்ளார். மக்களை காக்க ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடிய போதும் அவற்றின் மீது ஜிம் வைத்திருந்த நேசத்தை உணர முடிந்தது. ஆறு ஆட்கொல்லி புலிகள், ஒரு சிறுத்தை மற்றும் ஒரு மயில் கெண்டை மீன் ஆகியவற்றின் வேட்டை  அனுபவங்களை இப்புத்தகம் கொண்டுள்ளது. ஜிம் ஒரு இடத்தில் கூட தன்னை மிகைப்படுத்தாமல் வேட்டையின் போது அஞ்சி நடுங்கிய தருணங்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அவரின் இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் தேச வேறுபாடின்றி மக்களை அவர் நேசித்ததை ...