Skip to main content

அம்மா வந்தாள் - வாசிப்பு அனுபவம்


தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல் பவா செல்லத்துரையின் கதையாடல் மூலமே எனக்கு அறிமுகம் ஆனது. நாவலின் கதைக்களம் மற்றும் அது பேசும் விசயம் என்னை வாசிக்க தூண்டியது. நேற்று தான் படிக்க தொடங்கினேன். புத்தகத்தை வைக்க மனமே வராததால் தொடர் வாசிப்பாய் முடித்தேன். பல வருடங்களுக்கு பின் தொடர் வாசிப்பில் முடித்த புத்தகம் இது, அதுவே பெருமகிழ்ச்சி தந்தது.

கதைக்கருவும், எழுத்து நடையும் நம்மை இதனுள் மூழ்கடித்து விடுகிறது. மனித வாழ்வு சாஸ்திரம் , சமூக கட்டுகளால் அன்றி மனித உணர்வால் மட்டுமே கட்டமைக்கப்படுகிறது என்பதே கதையின் நோக்கு.

தி.ஜாவின் மொழியும் , சத்தமின்றி சமூக புறையோடல்கள் மீது சாட்டையை சுழற்றும் வித்தையும் பிரமிக்க வைத்தன. இந்நாவலில் நாகரீகத்தின் உச்சம் நாங்கள் தான் என ஏமாற்றும் பிராமணர்களின் அடி மடியில் கைவத்திருக்கிறார். இந்த நாவலுக்காக தி.ஜா வை ஊருக்குள் வர தடை விதித்திருக்கிறது அவர் கிராமம். ஆனால் இவர் பேசிய விசயத்திற்கு இதெல்லாம் குறைவு தான்.

1960 களில் பெண்களின் விருப்பு, வெறுப்புகளை கணக்கில் கொள்ளாமல் குடும்ப கவுரவம், சாதி, ஆச்சாரம், பண்பாடு என பலவற்றின் பெயரால் தீர்மானிக்கபட்டு பெரும் அழுத்தத்தில் சென்று கொண்டிருந்த இரு பெண்களின் வாழ்வு தான் கதையின் அச்சாரம். பின் அவர்கள் தங்கள் மன விருப்பப்படி வழக்கத்தை  உடைத்து , தங்கள் வாழ்வின் நிகழ்வுகளை விருப்பப்படி தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படியான அவர்களின் மீறல்கள் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றத்தை மிக எதார்த்தமாக எழுதியுள்ளார் தி.ஜா.

அப்பெண்கள் இருவரின் மீறல்களுக்கான நியாத்தை பெண்கள் மீதான கனிவோடு அதே நேரத்தில் கம்பீரமாகவும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அவரின் இந்த மாதிரியான வெளிப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பிராமண சமூகத்தின் ஆணாதிக்கத்தையும், பிற்போக்குத்தனங்களையும், வேதங்கள், புரோகிதம் போன்ற பித்தலாட்டங்களையும் பல இடங்களில் சாடியிருக்கிறார். அதோடு ஆண், பெண் உறவின் உளவியல் சிக்கல்களை நுட்பமாகவும் , மிக ஆழமாகவும் பேசியுள்ளார். வருடங்கள் பல கடந்தும் இன்றும் பெரும்பாலான பெண்களின் வாழ்வு இந்நாவில் இருக்கும் நிலையிலேயே இருப்பது தான் நம் சமூகத்தின் கேவல நிலை.

காவிரி, வயல் வெளி, அமைதி, அன்பான மனிதர்கள் என கிராம வாழ்வின் அழகியல்களையும் கதைக்கு இடஞ்சல் தராமல் போக்கிலே மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார். குறிப்பாக பெண்களின் அழகை தி.ஜா போல் ஒருவராலும் கொண்டாட முடியாது என நிரூபிக்கும் இடங்களும் பல உள்ளன, அவையெல்லாம் ரசித்து தீராதவை.

ஆண்கள் அனைவரும் அவசியம் படித்து தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டிய புத்தகம் இது. அனைவரும் அவசியம் வாசியுங்கள் நண்பர்களே !

Comments

Popular posts from this blog

என் தாய் மரணிக்கின்றாள்

ஆம் என் தாய் மரணிக்கின்றாள்... தாமிரபரணித்தாய் மரணிக்கின்றாள்... அது ஒரு மங்கிய மாலைப்பொழுது அன்னையே நான் உன் மடியில் அமர்ந்திருந்தேன்... தென்றல் தீண்டையில் உன் தேகம் சிலிர்த்ததை நான் மட்டுமே கண்டேன்... பறவைகள் உனை பருகிய வேளையில் நானும் உனை பருகி பரவசம் அடைந்தேன்... உன் உள்ளக்களிப்பை நான் உணர்ந்திருந்தேன்... மார்முட்டும் பிள்ளையின் அன்னையாய் நீ பூரித்திருந்தாய்... அந்த சலனமற்ற பயணத்தில் உன் மெல்லிய குரல் என்னை கரையச் செய்தது... கதிரவனின் செந்நிறக் கிரணங்களில் உன் மேனி பொலிவுற்றிருந்தது... பொதிகையில் பிறந்தவளே என் அன்னையே... உன் பாதம் பட்ட இடமெல்லாம் பசுமை பரப்பினவளே ... உழவுக்கு உயிரளித்து எங்களுக்கு அன்னமிட்டவளே... வானம் வஞ்சித்த போதிலும் எங்களுக்கு வாழ்வளித்தவளே... இன்று நீ மரணித்துக்கொண்டிருக்கிறாய்... அநேக அன்னைகளாய் உன் மக்களே உனக்கு மரணம் தந்துவிட்டனர்... பேராசை பித்து பிடித்த கயவர்கள் உன் மேனியைச் சுரண்டி மாளிகை கட்டிக்கொண்டார்கள்.... தாயை கொன்று தன்னை வளர்த்துக்கொண்டார்கள்... மார்பில் துளையிட்டு உனை உறிஞ்சிவிட்டார்கள் பன்னாட்டு பணவெறியர்கள்... உன் பாதையெங்...

குமாயுன் புலிகள் - வாசிப்பு அனுபவம்

குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ.ர. ஜிம் கார்பெட் ஓர் ஆங்கிலேய வேட்டைக்காரர் மற்றும் வன உயிர் ஆர்வலர். கம்பெனி ஆட்சிக் காலத்தில் இன்றைய உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாயுன் பிரதேசத்தில் தங்கி அங்குள்ள ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடியவர். இவ்வாறான வேட்டை அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். கிண்டிலில் தினமும் கிடைக்கும் இலவச புத்தகங்களில் ஒன்றாய் இது எனக்கு கிடைத்தது. ஆசிரியர் உரையின் வழியே வேங்கைகள் ஆட்கொல்லிகளாக மாறுவதன் காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார் ஜிம். மேலும் வேங்கைகள் மீதான மோசமான பொது கருத்துக் களை உடைக்கவும் செய்துள்ளார். மக்களை காக்க ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடிய போதும் அவற்றின் மீது ஜிம் வைத்திருந்த நேசத்தை உணர முடிந்தது. ஆறு ஆட்கொல்லி புலிகள், ஒரு சிறுத்தை மற்றும் ஒரு மயில் கெண்டை மீன் ஆகியவற்றின் வேட்டை  அனுபவங்களை இப்புத்தகம் கொண்டுள்ளது. ஜிம் ஒரு இடத்தில் கூட தன்னை மிகைப்படுத்தாமல் வேட்டையின் போது அஞ்சி நடுங்கிய தருணங்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அவரின் இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் தேச வேறுபாடின்றி மக்களை அவர் நேசித்ததை ...

மீட்பை நோக்கி - பயண அனுபவம்

எல்லோர் வாழ்விலும் மறக்க விரும்பா நாள் ஒன்று இருக்கும், என் வாழ்வில் அப்படியான ஒரு நாள் தான் அது. அது ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியத்துக்கு மேலாகவே அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை. காரணம் இல்லாத அதீத மன அழுத்தம், எதையாவது உடைக்க வேண்டும் போன்ற மனவோட்டம் இரண்டும் உருவாகியிருந்தது. நேரம் செல்ல செல்ல அந்த அழுத்தம் கூடிக்கொண்டே போனது. எதற்கும் அந்த அழுத்தம் கட்டுப்படவே இல்லை புத்தகம், நண்பர்கள் எதற்கும். மெல்ல அந்த அழுத்தம் தற்கொலை எண்ணமாக மாறுவதை உணரவே மனதில் பயம் வர ஆரம்பித்தது. திடீரென தனியாக எங்காவது பயணம் செல்வோம் அது உதவும் என தோன்றியது. நீண்ட நாள் ஆசையான தஞ்சாவூர் போகலாம் என முடிவு செய்து கிளம்பினேன்.  இப்பயணத்தில் கைபேசி இல்லாமல் மனிதர்கள் உதவி கொண்டே எல்லா விஷயத்தையும் செய்யணும்னு முடிவு பண்ணிக்கிட்டேன். முன்பதிவுகள் புகைப்படம் கூடாதெனவும் முடிவு.  சென்னை கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு விரைவு பேருந்தில் ஏறிக்கொண்டேன். பின் பகுதியில் தான் இடம் இருந்தது மெல்ல உள்ளே சென்றேன் ஜன்னல் ஒர இருக்கையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். அவனது வசீகரிக்கிற, சுறுசுறுப்பான முகம் மன...