எஸ்.ராமகிருஷ்ணனின் ரயில் நிலையங்களின் தோழமை பயணக் கட்டுரைத் தொகுப்பில் காந்தி நினைவிடம் சென்றது பற்றிய கட்டுரை வாசித்ததும் காந்தி பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை தொற்றிக் கொண்டது. அவ்வாறே பல ரூபங்களில் காந்தி புத்தகத்தை வாசிக்க தொடங்கினேன்.
காந்தியை மேலோட்டமாக ஆனால் பல கோணங்களில் அறிந்து கொள்ள இப்புத்தகம் உதவியது. வாசித்து முடித்ததும் காந்தியை பற்றிய மதிப்பு பெரிதும் கூடியது. கொள்கை, தத்துவம் மற்றும் நம்பிக்கை ரீதியாக காந்தியுடன் பல முரண்கள் இருந்தாலும் அவர் ஆன்மா, கருணை மற்றும் பண்புகள் என்னை பிரமிக்க வைத்தன.
காந்தியின் இருபத்து ஏழு ரூபங்கள் பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுதி இப்புத்தகம். காந்தி பற்றி பொதுச் சமூகம் அறிந்திராத பல ஆச்சர்யமான, வியக்கத்தக்க மற்றும் ஆழமான தாக்கம் ஏற்படுத்தும் தகவல்கள் உள்ளன.
காந்தி தான் செய்த எல்லா பணிகளையும் நேசத்துடன், அர்ப்பணிப்புடன், ஆழமாக செய்திருக்கிறார். ஏனோ தானோ என எந்த பணியையும் அவர் செய்யவில்லை.
காந்தி கருணை பொங்கும் உள்ளம் கொண்டவர். அன்னை தெரசா போலவே எனக்கு தோன்றினார். எளிய மக்கள் மேல் அளவு கடந்த நேசம் கொண்டிருந்தார். நாட்டு மக்களின் துன்பம் கண்டு அவர் மனம் துடி துடித்து போயிருக்கிறார். அவர்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த வர் அவர்.
காந்தியின் எளிமையும் அதற்கான காரணமும் பிரமிக்க வைக்கிறது. இன்றைய அரசியல் வாதிகளை ஒப்பிட்டு பார்க்கையில் நமக்கு கடும் சினம் வருகிறது. உண்மையில் ஒரு தலைவன் மீதான நம்பிக்கை மற்றும் மதிப்பு பிரமாண்டத்தால் வருவதில்லை. மாறாக சத்தியம் மற்றும் நேர்மையால் வருகிறது என்பதற்கு காந்தியை ஓர் சிறந்த உதாரணம்.
காந்தி சொல்லியதை போல அவர் வாழ்வே நமக்கான பாடம். அவசியம் இன்றைய தலைமுறை வாசிக்க வேண்டிய புத்தகம். எளிய நடையில் நன்றாக மொழி பெயர்த்துள்ளார் ராஜ கோபாலன்.
Comments
Post a Comment