Skip to main content

அருள் ஜெகன் எனும் தேவதை

அருள் ஜெகன் அண்ணனை பற்றி எழுத வேண்டும் என நினைத்ததுமே  கருணையும், தாய்மையும் சேர்ந்து ஒரு தேவதையாகவே அவன் மனதில் உருப்பெற்றான். மேலும்  இக்கட்டுரைக்கு தேவதை எனும் தலைப்பே வந்து நிலைபெற்று விட்டது. எவ்வளோ யோசித்தும் தேவதையை தாண்டி வேறு வார்த்தை ஏதும் தோன்றவே இல்லை.

அருள் ஜெகன்  எனது கல்லூரியில் படித்த அண்ணன். நம் சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அல்லது மதிக்கப்படும் அடையாளங்களின் படி அவன் ஒரு மென்பொருள் பொறியாளன். அனால் என்னளவில் அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல நண்பர்களே. மாறாக அவனது தேவதை அவதாரமே நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது. அவனது தேவதை கதைகளின் வழியாக அவனை உங்களுக்கு அறிமுகம் செய்வதையே விரும்புகிறேன். அவ்வாறு அவன் உங்கள் மனதில் பதிவதையே அவனுக்கான சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன்.  உண்மையில் இந்த மாதிரியான எந்த அங்கீகாரத்தையும், பெருமைகளையும் அவன் சட்டை செய்வதில்லை.  அதனாலேயே அவன் என் மனதில் தேவதை எனும் உருவம் கொள்கிறான்.

பொதுவாக கல்லூரியின்  இறுதி ஆண்டு படிக்கும் எல்லோரும் குறிப்பாக இயந்திரவியல் துறை மாணவர்கள் ஊர் சுற்றுதல், நண்பர்கள் இல்லத்திற்கு செல்லுதல், சேர்ந்து படம் பார்த்தல் மற்றும் மது குடித்தல் இவையே வாழ்வில் மகிழ்ச்சிக்கான வழிமுறைகளாக கருதிய போது அருள் அண்ணன் அவர்களுக்கு வேறு வழியை காண்பித்தான். அவனோடு இறுதி ஆண்டு படித்த நண்பர்களோடு பணம் வசூலித்து, அவர்களின் கல்லூரியின் இறுதி நாளை குழந்தைகள் இல்லம் ஒன்றில் கொண்டாட வைத்தான். அதுவரை எங்கள் கல்லூரியில் யாரும் செய்திடாத ஒன்றை அவன் அப்போது செய்து காட்டினான். அர்த்தமற்று பொறுப்பில்லாமல் மேம்போக்காகவே இளைஞர்கள் வாழ்வார்கள் என்று கல்லூரியில் நினைத்தவர்களை எல்லாம் அவர்களின் இந்த செயல் கண்டு வியந்து அவர்களை பாராட்டி, பெருமிதம் அடைய செய்தான் அவன்.

அவன் படித்து மூன்று ஆண்டுகள் கழித்து எங்கள் இறுதி ஆண்டில் இதே போல் குழந்தைகள் இல்லத்திற்கு செல்வதற்காக கல்லூரியில் உதவி கேட்டு அணுகிய போது எல்லோரும் அருள் அண்ணனின் செயலை எங்களிடம் கூறினார்கள். அன்று தான் எனக்கு அருள் என்னும் தேவதை அறிமுகம் ஆனான். மானசீகமாக அவனை நான் நேசிக்க ஆரம்பித்திருந்தேன். அதன் பின் இது ஒரு வழக்கமாகவே எங்கள் கல்லூரியில் மாறிப்போனது. அதோடு இன்று வரை அந்த நண்பர்கள் குழு எல்லா வருடமும் அதே நாளில் ஒரு கருணை இல்லத்திற்கு சென்று பொருள் ரீதியான உதவிகளையும் அவர்களோடு நேரம் செலவிடுவதையும் தவறாமல் செய்து வருகிறார்கள்.நண்பர்களே, அருள் அண்ணன் போன்ற தேவதைகளின் வருகையே எப்பொழுதும் நம் வாழ்வை பரிசுத்தமாகவும், அர்த்தமுள்ளதாகவும்  மாற்றும் !!

நான் வேலைக்கு சேர்ந்து சென்னை வந்திருந்த முதல் வருடத்தில் செங்கல்பட்டு அருகில் உள்ள சிறுமலர்கள் எனும் குழந்தைகள் இல்லத்திற்கு எங்கள் கல்லூரியின் சொந்தங்களோடு சென்றிருந்தோம். அன்று தான் நான் அருள் அண்ணனை நேரில் சந்தித்தேன். அன்று நீண்ட நேரம் உரையாடினோம்.  சாதி, அரசியல், மதம் மற்றும் இலங்கை பிரச்சணை என பலவற்றை பற்றி பேசினோம். நம் வாழ்வின் சாபக்கேடான தீண்டாமை மற்றும் வறுமை போன்றவற்றின் மீது அவனுக்கு அளவற்ற கோபம் இருக்கிறது. ஆயினும் மிகுந்த கனிவான தாயுள்ளம் கொண்டவன் அவன். ஏற்ற தாழ்வற்ற மகிழ்ச்சியான எல்லோருக்குமான நல்வாழ்வே அவனது கனவு, லட்சியம் மற்றும் வாழ்வு எல்லாம். முக்கியமாக  ஒரு சமூக போராளிக்கு சுய ஒழுக்கம் மிக மிக அவசியம் என்பதை ஆழமாக பின்பற்றுகிறவன் அவன்.

எல்லா பேரிடர்களிலும் மானுடத்திற்காக அவன் களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறான். மனிதர்கள் அவனை ஏமாற்றிய போதும் சுயநலத்திற்காக வஞ்சித்த போதும் மானுடத்தின் மீதான அவனது நம்பிக்கை குறைந்ததே  இல்லை.2016  டிசம்பர் சென்னையை பெரு வெள்ளம் சூறையாடியதின் பிறகான மீட்டுப் பணியில் அருள் அண்ணன் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது ஒரு வட மாநில இளைஞன் அவனை அணுகி ஒரு பெரு நிறுவனத்தின் நேர்முக தேர்விற்காக சென்னை வந்து மாட்டிக்கொண்டதாகவும் தங்க இடமும், உணவும் இன்றி தவிப்பதாகவும் கூறி இருக்கிறான். அவன் சொன்ன நிறுவனமோ அல்லது அவனது நாகரீகமோ நம் தேவதைக்கு பொருட்டே அல்ல. உதவி என கேட்கும் மனிதனுக்கு ஏதும் யோசிக்காமல் என்ன உதவியையும் செய்யும் மனம் கொண்டவன் அவன். அவ்வாறே அந்த இளைஞனை தன் வீட்டில் தங்க வைத்துவிட்டு மீண்டும்  களப்பணியில் மும்மரமாகி விட்டான். அன்று இரவே அந்த இளைஞன் இவன் வீட்டில் இருந்த விலையுர்ந்த பொருட்களை திருடி சென்று விட்டான். அதில் அருள் அண்ணனின் நண்பர்கள் பொருட்களும் அடக்கம். நண்பர்கள் அனைவரும் இவனிடம் சண்டையிட தன் சொந்த பணத்தில் அனைவருக்கும் அவர்கள் பொருட்களை திரும்ப வாங்கி கொடுத்தான். அதில் மட்டும் அவனுக்கு சில லட்சங்கள் நஷ்டம். ஆயினும் அருள் அண்ணனுக்கு அந்த இளைஞன் மீதோ, ஒட்டு மொத்த மனிதர்கள் மீதோ சிறு கோபமும் இல்லை. இதே சம்பவம் நமக்கு நடந்திருந்தால், நாமெல்லாம் மனித இனமே தீயவர்கள் என முத்திரை குத்தி உதவி செய்வதையே நிறுத்தி இருப்போம். அனால் அவன் அதன் பின்னும் மனிதர்களை வெறுக்கவில்லை. இன்று வரை அவனிடம் உதவி கேட்ட பலபேர்களுக்கு சிறிதும் யோசிக்காமல் உதவிகள் செய்துகொண்டே இருக்கிறான். சமூகத்தின் பார்வையில் இவன் பெரிய முட்டாள். ஆனால் நண்பர்களே கீழ்மை மனிதர்கள் என்ன செய்த போதிலும் இயற்கை மனிதர்கள் மீதான கருணையை இழந்ததே இல்லை. அவ்வாறு  இயற்கை நம் மீது கோபம் கொண்டால் நம் வாழ்வு நிச்சயம் அழிந்து போகும் நண்பர்களே. அந்த கருணையினால் மட்டுமே மனித வாழ்வு பிழைத்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நண்பர்களே அருள் அண்ணன் பரிசுத்தமான இயற்கையின் மனித வடிவமே, கருணையினால் ஆன தேவதையே.

இன்றைய நோய்த்தொற்றின் நெருக்கடியில் கூட நாங்களெல்லாம் தப்பித்தோம் என சொந்த ஊரை நோக்கி ஓடி வந்த பொழுதும் அவன்  சென்னையில் இருந்து கொண்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளை  இருந்து செய்து கொண்டிருக்கிறான். வெறும் மூன்று மணி நேரம் மட்டும் உறங்கி, சரியாக உணவு சாப்பிடாமல் வேலை செய்துகொண்டிருக்கிறான். இத்தனைக்கும் அவன் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் ஒரு மாதம் மிக மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்திருக்கிறான். இப்போதெல்லாம் அவனிடம் பேசும் பொழுது எனக்கு சமூகம் பற்றி பேச தோன்றுவது இல்லை. அவன் உடல் நலம் பற்றியே பேசுகிறேன். ஏனெனில் அவன் சமூகத்தையும் மானுடத்தையும் கவனித்து கொள்வான் அனால் அவனை மட்டும் கவனிக்க அவனுக்கு தோன்றுவதே இல்லை.

இவற்றை எல்லாம் சிறியதாக்கும் வகையில் தன் தனிப்பட்ட முயற்சியால் ஒரு இருளர் இன கிராமத்தையே தத்து எடுத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து கொண்டிருக்கிறான். மேலும் அங்குள்ள குழந்தைகள் அனைவரின் கல்விக்கும் பொறுப்பேற்று இருக்கிறான். நகரத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு இவ்வாறான கிராமங்கள் இருப்பதை நம்புவதே கடினமாக இருக்கும். அந்த அளவுக்கு பின் தங்கிய நிலையில் உள்ள கிராமம் அது. உதாரணத்திற்கு அந்த கிராமத்தில் இன்னும் மின்சார வசதி கிடையாது. இக்கிராம மக்கள் யாவரும்  இந்தியர்கள் என்பதற்கான எந்த அடையாளமும்  இல்லாதவர்கள். அதாவது ஆதார், ஓட்டு, குடும்ப அட்டை போன்ற ஏதும்  இல்லாதவர்கள்.  ஆதலால் இவர்கள் அரசியல்வாதிகளுக்கும், அரசாங்கங்களுக்கும் அவசியமற்றவர்கள். நண்பர்களே,  நம் கற்பனைக்கும் எட்டாத வாழ்வை வாழும் மக்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நண்பர்களே, சக மனிதனின் வாழ்வு நெருக்கடிக்குள்ளாகும் போதெல்லாம் அருள் ஜெகன் என்னும் தேவதையின் தோன்றல் நிச்சயம் நிகழும். சக மனிதனின் இருள் சூழ்ந்த வாழ்வில் தன்னை எரித்து கூட வெளிச்சம் ஏற்றி வைப்பான் அந்த தேவதை. அவன் சார்ந்த எனக்கான பெருமிதமும் சோகமும் இதுவே தான். அவன் போல உதவ முடியாவிட்டாலும் நம்மால் இயன்ற உதவிகளை சாதி, மதம், மொழி, நாடு என்ற எல்லைகளை தாண்டி சக மனிதனுக்காக அவசியம்  நாமும் செய்வோம். மேலும் அருள் ஜெகன் போன்ற தேவதைகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் தங்கள் வாழ்வின் வழியே நமக்கு வழிகாட்டுகிறார்கள். அவர்கள் வழி நாமும் நடந்து செல்ல முயற்சி செய்வோம் . நண்பர்களே, இவர்கள் போன்ற தேவதைகளால் இப்பூவுலகம் அழகாக மாறட்டும்...


Comments

  1. மதிப்பிற்க்கும் போற்றுதலுக்குமுரிய அண்ணன் AJ

    ReplyDelete
  2. மனிதர்களுள் ஒருவர்

    ReplyDelete
  3. பெருமை மிகு தம்பி அருள் ஜெகன் ஒரு நீரோடையை போல..

    அவன் செல்லுமிடமெல்லாம் மானுடர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை மட்டும் அள்ளி தந்திருக்கிறான் , இனியும் தருவான்..

    நான் மட்டுமின்றி எத்தனையோ எம்மக்கள் வாழத்துடித்த ஒரு வாழ்க்கை அவனுக்கு, ஆனாலும் எங்கள் யாராலும் முழுதாய் வாழ முடியா ஒரு வாழ்க்கை...

    உன் எண்ணம் எல்லாம் நிறைவேறட்டும் தம்பி...


    என்றும் அன்புடன்,
    முகம்மது யூசுப்.

    ReplyDelete
  4. The most beautiful person in my life. Really we are lucky to have you brother.

    ReplyDelete
  5. எழுத்துக்கள் அருமை சகோ.வாழ்த்துக்கள் மாப்ள

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தாய் மரணிக்கின்றாள்

ஆம் என் தாய் மரணிக்கின்றாள்... தாமிரபரணித்தாய் மரணிக்கின்றாள்... அது ஒரு மங்கிய மாலைப்பொழுது அன்னையே நான் உன் மடியில் அமர்ந்திருந்தேன்... தென்றல் தீண்டையில் உன் தேகம் சிலிர்த்ததை நான் மட்டுமே கண்டேன்... பறவைகள் உனை பருகிய வேளையில் நானும் உனை பருகி பரவசம் அடைந்தேன்... உன் உள்ளக்களிப்பை நான் உணர்ந்திருந்தேன்... மார்முட்டும் பிள்ளையின் அன்னையாய் நீ பூரித்திருந்தாய்... அந்த சலனமற்ற பயணத்தில் உன் மெல்லிய குரல் என்னை கரையச் செய்தது... கதிரவனின் செந்நிறக் கிரணங்களில் உன் மேனி பொலிவுற்றிருந்தது... பொதிகையில் பிறந்தவளே என் அன்னையே... உன் பாதம் பட்ட இடமெல்லாம் பசுமை பரப்பினவளே ... உழவுக்கு உயிரளித்து எங்களுக்கு அன்னமிட்டவளே... வானம் வஞ்சித்த போதிலும் எங்களுக்கு வாழ்வளித்தவளே... இன்று நீ மரணித்துக்கொண்டிருக்கிறாய்... அநேக அன்னைகளாய் உன் மக்களே உனக்கு மரணம் தந்துவிட்டனர்... பேராசை பித்து பிடித்த கயவர்கள் உன் மேனியைச் சுரண்டி மாளிகை கட்டிக்கொண்டார்கள்.... தாயை கொன்று தன்னை வளர்த்துக்கொண்டார்கள்... மார்பில் துளையிட்டு உனை உறிஞ்சிவிட்டார்கள் பன்னாட்டு பணவெறியர்கள்... உன் பாதையெங்...

குமாயுன் புலிகள் - வாசிப்பு அனுபவம்

குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் தமிழில் தி. ஜ.ர. ஜிம் கார்பெட் ஓர் ஆங்கிலேய வேட்டைக்காரர் மற்றும் வன உயிர் ஆர்வலர். கம்பெனி ஆட்சிக் காலத்தில் இன்றைய உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாயுன் பிரதேசத்தில் தங்கி அங்குள்ள ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடியவர். இவ்வாறான வேட்டை அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். கிண்டிலில் தினமும் கிடைக்கும் இலவச புத்தகங்களில் ஒன்றாய் இது எனக்கு கிடைத்தது. ஆசிரியர் உரையின் வழியே வேங்கைகள் ஆட்கொல்லிகளாக மாறுவதன் காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார் ஜிம். மேலும் வேங்கைகள் மீதான மோசமான பொது கருத்துக் களை உடைக்கவும் செய்துள்ளார். மக்களை காக்க ஆட்கொல்லி புலிகளை வேட்டையாடிய போதும் அவற்றின் மீது ஜிம் வைத்திருந்த நேசத்தை உணர முடிந்தது. ஆறு ஆட்கொல்லி புலிகள், ஒரு சிறுத்தை மற்றும் ஒரு மயில் கெண்டை மீன் ஆகியவற்றின் வேட்டை  அனுபவங்களை இப்புத்தகம் கொண்டுள்ளது. ஜிம் ஒரு இடத்தில் கூட தன்னை மிகைப்படுத்தாமல் வேட்டையின் போது அஞ்சி நடுங்கிய தருணங்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். அவரின் இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் தேச வேறுபாடின்றி மக்களை அவர் நேசித்ததை ...

மீட்பை நோக்கி - பயண அனுபவம்

எல்லோர் வாழ்விலும் மறக்க விரும்பா நாள் ஒன்று இருக்கும், என் வாழ்வில் அப்படியான ஒரு நாள் தான் அது. அது ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியத்துக்கு மேலாகவே அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை. காரணம் இல்லாத அதீத மன அழுத்தம், எதையாவது உடைக்க வேண்டும் போன்ற மனவோட்டம் இரண்டும் உருவாகியிருந்தது. நேரம் செல்ல செல்ல அந்த அழுத்தம் கூடிக்கொண்டே போனது. எதற்கும் அந்த அழுத்தம் கட்டுப்படவே இல்லை புத்தகம், நண்பர்கள் எதற்கும். மெல்ல அந்த அழுத்தம் தற்கொலை எண்ணமாக மாறுவதை உணரவே மனதில் பயம் வர ஆரம்பித்தது. திடீரென தனியாக எங்காவது பயணம் செல்வோம் அது உதவும் என தோன்றியது. நீண்ட நாள் ஆசையான தஞ்சாவூர் போகலாம் என முடிவு செய்து கிளம்பினேன்.  இப்பயணத்தில் கைபேசி இல்லாமல் மனிதர்கள் உதவி கொண்டே எல்லா விஷயத்தையும் செய்யணும்னு முடிவு பண்ணிக்கிட்டேன். முன்பதிவுகள் புகைப்படம் கூடாதெனவும் முடிவு.  சென்னை கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு விரைவு பேருந்தில் ஏறிக்கொண்டேன். பின் பகுதியில் தான் இடம் இருந்தது மெல்ல உள்ளே சென்றேன் ஜன்னல் ஒர இருக்கையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். அவனது வசீகரிக்கிற, சுறுசுறுப்பான முகம் மன...