தாமிரபரணித்தாய் மரணிக்கின்றாள்...
அது ஒரு மங்கிய மாலைப்பொழுது அன்னையே நான் உன் மடியில் அமர்ந்திருந்தேன்...
தென்றல் தீண்டையில் உன் தேகம் சிலிர்த்ததை நான் மட்டுமே கண்டேன்...
பறவைகள் உனை பருகிய வேளையில் நானும் உனை பருகி பரவசம் அடைந்தேன்...
உன் உள்ளக்களிப்பை நான் உணர்ந்திருந்தேன்...
மார்முட்டும் பிள்ளையின் அன்னையாய் நீ பூரித்திருந்தாய்...
அந்த சலனமற்ற பயணத்தில் உன் மெல்லிய குரல் என்னை கரையச் செய்தது...
கதிரவனின் செந்நிறக் கிரணங்களில் உன் மேனி பொலிவுற்றிருந்தது...
பொதிகையில் பிறந்தவளே என் அன்னையே...
உன் பாதம் பட்ட இடமெல்லாம் பசுமை பரப்பினவளே ...
உழவுக்கு உயிரளித்து எங்களுக்கு அன்னமிட்டவளே...
வானம் வஞ்சித்த போதிலும் எங்களுக்கு வாழ்வளித்தவளே...
இன்று நீ மரணித்துக்கொண்டிருக்கிறாய்...
அநேக அன்னைகளாய் உன் மக்களே உனக்கு மரணம் தந்துவிட்டனர்...
பேராசை பித்து பிடித்த கயவர்கள் உன் மேனியைச் சுரண்டி மாளிகை கட்டிக்கொண்டார்கள்....
தாயை கொன்று தன்னை வளர்த்துக்கொண்டார்கள்...
மார்பில் துளையிட்டு உனை உறிஞ்சிவிட்டார்கள் பன்னாட்டு பணவெறியர்கள்...
உன் பாதையெங்கும் இன்று கருவேலக் காடாகிவிட்டதே அம்மா...
குளிர் அறைகளில் உன் குருதி குடிக்கும் கணவான்கள் உன் மரணம் அறிய வாய்ப்பேது அம்மா...
மௌனத்தின் உச்சத்தில் நின்று ஓலமிடுகிறேன் உன் மரணம் கண்டு...
என்னை பெற்ற தாயின் பிரிவு வலியை இன்று உனக்காய் உணர்கிறேன்...
என் மரணம் முன் உன் மரணம் தடுப்பேன்...
அதே மங்கிய மாலைப்பொழுதை உனக்காய் பரிசளிப்பேன்...
இன்னும் பல தலைமுறைகளை நீ பாதுகாக்க.....
அருமை டா
ReplyDeleteதாமிரபரணி பாதுகாக்க வேண்டும்,, கவிதை மிகவும் அருமை தம்பி
ReplyDelete